சுரம்
இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்)[1] என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். இது கோவை அல்லது தாது என்றும் அழைக்கப்படும். இயற்கையாகவே இனிமையைத் தருவது. சுருதி என்ற அடி நிலையிலிருந்தே சுரம் என்ற நாதப்படிகள் தோன்றியுள்ளன. இவைகள் இசைமுறைகளை விளக்கமாயும், தெளிவாய்ப் பாடவும், வாசிக்கவும் துணை புரிகின்றன.
தேர்ந்து கூட்டும் சுரங்களில் இருந்து இராகங்கள் பிறக்கின்றன. ஒவ்வொரு இராகமும் அல்லது பண்ணும் சில குறிப்பிட்ட சுரங்களினால் அழகுணர்வுடன் பின்னப்பட்ட ஓர் அமைப்பாகும்.
சுரங்களின் வகைகள்
தொகுஇயற்கை ஒலிகள் ஏழாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மிருகங்கள் மற்றும் பறவைகளின் குரல்களில் இருந்து இனம் காணப்பட்டது என்று இந்திய இசை நூல்கள் தெரிவிக்கின்றன. இவையே சங்கீதத்திற்கு ஆதாரமாயுள்ள சப்தசுரங்கள் ஆகும்.
- ஸ ரி க ம ப த நி, இதனை சப்தகம் என்று அழைப்பர்,
- ஸ ரி க ம ப த நி ஸ், இதனை அஷ்டகம் என்று அழைப்பர்.
சுரங்கள் | வடமொழிப்பெயர் | தமிழ்ப்பெயர் | தொனிகள் |
---|---|---|---|
ஸ (அல்) ச | சட்சம் (ஷட்ஜம்) | குரல் | மயில் |
ரி | ரிஷபம் | துத்தம் | ரிஷபம் |
க | காந்தாரம் | கைக்கிளை | ஆடு |
ம | மத்திமம் | உழை | க்ரௌஞ்சம் |
ப | பஞ்சமம் | இளி | கோகிலம் (குயில்) |
த | தைவதம் | விளரி | குதிரை |
நி | நிசாதம் (நிஷாதம்) | தாரம் | யானை |
துணை சுரங்கள்
தொகுசப்தசுரங்கள் ஏழும் தனது இயற்கையான சுர நிலைகளில் இருந்து சற்றே உயர்ந்தோ தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்தச் சுரங்களின் துணை சுரமாகின்றன. இவற்றைப் பிரகிருதி, விக்ருதி பேதங்கள் என்பார்கள். ஷட்ஜமம், பஞ்சமம் இரண்டும் பேதமில்லாதவை. மற்றைய ஐந்தும் பேதமுடையவை. இவற்றின் விபரங்களைக் கீழே காண்க.
குறியீடு | பெயர் | வேறுபாடு | எண்ணிக்கை |
ஸ | ஷட்ஜம் | -- | 1 |
ரி1 | ரிஷபம் | சுத்த ரிஷபம் | 3 |
ரி2 | சதுஸ்ருதி ரிஷபம் | ||
ரி3 | ஷட்ஸ்ருதி ரிஷபம் | ||
க1 | காந்தாரம் | சாதாரண காந்தாரம் | 3 |
க2 | அந்தர காந்தாரம் | ||
க3 | சுத்த காந்தாரம் | ||
ம1 | மத்யமம் | சுத்த மத்யமம் | 2 |
ம2 | ப்ரதி மத்யமம் | ||
ப | பஞ்சமம் | -- | 1 |
த1 | தைவதம் | சுத்த தைவதம் | 3 |
த2 | சதுஸ்ருதி தைவதம் | ||
த3 | ஷட்ஸ்ருதி தைவதம் | ||
நி1 | நிஷாதம் | கைஷகி நிஷாதம் | 3 |
நி2 | காகலி நிஷாதம் | ||
நி3 | சுத்த நிஷாதம் |
சுரநிலைகளின் சிறப்பு அம்சங்கள்
தொகுஇவற்றுள் இயற்கையாக உள்ள சுரநிலைகள் பன்னிரண்டே ஆகும். சில சுரங்களை வேறு சுரங்களாக நினைத்துக் கொண்டு அதாவது அந்த ஸ்தானத்தில் பாடுதல் கருநாடக சுர வகைக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு அம்சமாகும்.
அதாவது,
- ரி2 = க1
- க2 = ரி3
- த2 = நி1
- நி2 = த3
ஏழு சுரங்களின் பெயர்க் காரணங்கள்
தொகு- ஷட்ஜம்: ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் சுரம் ஷட்ஜ்அம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் - ஆறு)
- ரிஷபம்: இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.
- காந்தாரம்: காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.
- மத்திமம்: ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.
- பஞ்சமம்: ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து)
- தைவதம்: தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.
- நிஷாதம்: ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Svara, Shvara, Svarā, Śvara: 41 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). 15 October 2015.